வரலாறு:
கி.பி. 1623 – லிருந்து 1659 வரை மதுரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த திருமலை நாயக்கரால் இந்த அரண்மனை எழுப்பப்பட்டது. தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில் மிகவும் எழில் வாய்ந்தது இதுவே. இந்த அரண்மனையைத் திருமலை மன்னர் 1636-ல் கட்டி முடித்தார். இந்த அரண்மனையிலே தம்முடைய 75ஆம் வயது வரை தமது மனைவியருடன் மன்னர் வசித்தார்.
திருமலை மன்னர் இந்த அரண்மனையைக் கட்டியபோது, இப்போது எஞ்சியுள்ளதைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியதாக இவ்வரண்மனை திகழ்ந்தது. இவ்வரண்மனையின் பல பகுதிகளைப் பற்றிய பண்டைய குறிப்புகள் இன்றும் உள்ளன. இங்கு சொர்க்க விலாசம், ரங்க விலாசம் என்று இரண்டு முக்கியப் பகுதிகள் இருந்தன. தவிர, பதினெட்டு வித இசைக்கருவிகள் இசைக்கும் இடம், பல்லக்கு முதலியவை வைக்கும் இடம், பூசை செய்யும் இடம், அரியணை மண்டபம், தேவியரின் அந்தப்புரம், நாடக சாலை, உறவினர்களும் பணி செய்பவர்களும் வசிக்கும் இடங்கள், வசந்தவாவி, மலர்வனங்கள், சுற்று மதிற்சுவர் முதலியன இருந்தன. திருமலை நாயக்கர் சொர்க்க விலாசத்திலும், இவரின் தம்பி முத்தியாலு நாயக்கர் ரங்க விலாசத்திலும் வசித்தனர்.
இப்போது நாம் காண்பதற்கு எஞ்சி உள்ள பகுதியே சொர்க்க விலாசம் என்பது. இப்பொழுதுள்ள அரண்மனை நுழைவாயில் முதலில் வைக்கப்பட்டது அல்ல. அரண்மனையின் நுழைவாயில் இவ்வரண்மனையின் வடக்கில் இருந்தது. அரண்மனையின் கிழக்குப் புறத்தில் பக்கத்துக்கு ஒரு சிகரமாக இரண்டு சிகரங்கள் இருக்கின்றன. இவற்றின் மேல் இருந்த ஸ்தூபிகள் தங்கத்தால் செய்யப்பட்டு இருக்கின்றன. தற்போது வடபுறச் சிகரத்தில் ஒரு கடிகாரம் வைக்கப்பட்டுள்ளது.